உங்கள் வருகைக்கு நன்றி...

Sunday, July 12, 2020

HEALTHY ORGANIC RICE

இயற்கை பாரம்பரிய அரிசி வகைகள் கிடைக்கும் திருவாரூர் மாவட்டம் பில்லூர் கிராமத்தில் 300 ஏக்கர் நிலபரப்பில் 100 விவசாயிகள் இணைந்து பாரம்பரிய முறையில் சாகுபடி செய்து இடைத் தரகர் இன்றி நேரடி வியாபாரம் செய்துவருகிறோம் 2019 - 2020 நாகை மாவட்ட ஆட்சியர் இயற்கை பாரம்பரிய விவசாயத்தை ஊக்கவிக்கும் முகமாக ரூபாய் 10000 நன்கொடை அளித்து கௌரவித்துள்ளார். ஆர்கானிக் அரிசி வகைகள் அனைத்தும் கிடைக்கும். KAVERI ORGANIC FOODS, GH SALAI,MAYILADUTHURAI 609001 SAKTHI NAGAR,ZAMIN PALLAVARAM, CHENNAI 600043. தொடர்பு 7299954505


Sunday, August 24, 2014

GREEN 7 PVT LTD.... CHENNAI








ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவு 

 FOR MORE TIPS
CALL @ CHENNAI # 9600360798


Sunday, October 7, 2012

நான் என்னை அறிந்தால்...

மீள் பதிவு
அமீரக வாழ்க்கை எனக்கு படிப்பியலில் ஆர்வத்தைக் கொடுத்தது. சுஜாதா, பட்டுக்கோட்டை பிரபாகர், ஜெயகாந்தன், சிவசங்கரி, பாலகுமாரன், அப்துற்றஹீம், எம்.எஸ்.உதயமூர்த்தி, கவிகோ, கவியரசு, மு.மேத்தா இன்னும் பலரின் எழுத்து என்னை எழுத தூண்டுவதற்கு காரணமாகியது.

தத்துவங்களை படிக்கும்போது மனதில் ஒருவித ஈர்ப்பு என்னை ஆட்கொள்ளும்.சிறுவயதில் திருக்குர்ஆனின் தமிழாக்கம் என்னை ரொம்பவும் யோசிக்க வைத்தது. என் செயல்களில் திருப்பத்தைக் கொடுத்தது. பைபிளிலும் பகவத்கீதையும் ஆழமாக சிந்திக்க வைத்தது. அதன் தாக்கங்களே எனக்கு ஆன்மீகத்தை அறிமுகம் செய்தது.

ஆன்மீகம் என்றால் அதில் ஈடுபடுபவர்கள் தாடிவைத்து, காவி உடுத்தி, வணக்கத்திலேயே சதாக் காலமும் வாழவேண்டும் என்றும், குடும்பப்பற்று இன்றி எந்நேரமும் இறைசிந்தனையோடு இருக்கவேண்டும் என்றும், பலர் எண்ணிக் கொண்டிருப்பார்கள் என்றே எண்ணுகிறேன். ஆன்மீகத்திற்கு உடைமாற்றம் தேவை இல்லை மன மாற்றம் தான் தேவை.
ஆன்மீகம் என்றால் பலருக்கு பயம். பயத்தைக் கொடுப்பது ஆன்மீகமல்ல அதை தெளிவுபடுத்துவதே ஆன்மீகம். அது அறிவுக் களஞ்சியம் அது அன்பை ஊற்றெடுக்க வைக்கும் அமுதசுரபி. மனிதனை மனிதனாக வாழவைக்கும் வழிகாட்டி.

வாழ்க்கையே வணக்கம் என்கிறான் இறைவன்.அந்த வணக்கமான வாழ்க்கையை புரிந்துக் கொள்வதற்கு ஆன்மீகத்தின் ஞானம் உதவி புரிகிறது.

ஆன்மீகத்தின் நுழைவாயிலில் என்னிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.அந்த கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை. எத்தனையோ நூல்களை படித்தும் என்னிடம் பதில் இல்லாமல் போனது எப்படி? ஏட்டு கல்வியில் கிடைக்காத பதில்கள் ஞானக்கல்வியில் கிடைக்கிறது.

ஞானிகள் அதிகம் யோசிக்கக் கூடியவர்கள். ஒரு கருத்தை கூறினால் அதில் பலவிதமான பொருள்கள் இருக்கும். பல ஞானக்கதைகளை வாசிக்கும் போது அது நமக்கு வெளிச்சப் படுத்துகிறது.

ஆன்மீகம் என்பது ஆன்மாவைப்பற்றிய விளக்கம் அந்த விளக்கம் தான் ஞானம்.
விஞ்ஞானிகள் எதையும் ஆராய்ந்து கூறும் போது உலகம் உடனே ஏற்றுக் கொள்ளும். ஆனால் மெய்ஞ்ஞானி ஒன்றை கூறினால் இந்த உலகம் யோசிக்கும். காரணம் அறியாமை ,விளங்காமை.

ஞானம் வெளியிலிருந்து தொடங்கப்படுவதல்ல.தன்னிடமிருந்து ஆரம்பிக்கப் படுவது. சுய சிந்தனையை தன்னில் ஏற்படுத்தக் கூடியது. ஞானம் கற்பதில் என்ன பயன் இருக்கிறது? என்ற சிந்தனை அதனுள் நுழையுமுன் என்னிடம் எழுந்தது.

ஒரு மருத்துவரிடம் நீங்கள் மருத்துவரானதால் உங்களுக்கு என்ன பயன்? என்று கேட்பதைபோல் தான் ஞானமும் என்று விளங்கப்படும் போது உணரப்பட்டேன்.

இந்த உலகில் எத்தனையோ விதமான அறிவுகள் படித்துக் கொடுக்கப்படுகின்றன அவைகளெல்லாம் பொருளீட்டலை மையமாக வைத்தே போதிக்கப்படுகிறது. ஆனால் மனிதனைப் பற்றி படித்துக் கொடுக்கப்படுவது தான் ஆன்மீகஞானம்.

ஒருமுறை குருநாதரிடம் ஓரு கேள்வி கேட்கப்பட்டது. பாவம் என்பது என்ன?

மனிதன் தன்னை தான் அறியாமல் இருப்பது தான் பாவம் என்று பதிலுரைத்தார்கள். ஒரு வரி பதிலாக இருந்தாலும் இதில் ஓராயிரம் விளக்கம் இருக்கிறது.

ஒரு மனிதன் இறைவனைத் தேடி காடு மேடெல்லாம் அலைந்து களைத்து போய் ஒரு இடத்தில் அமர்ந்திருக்கிறான். அருகிலிருந்த மனிதர் அவருக்கு களைப்பு நீங்க உணவு கொடுத்திருக்கிறார். உணவை உண்டதும் மீண்டும் இறைவனைத்தேட புறப்பட்டார். புறப்பட்டவரிடம் எங்கே செல்கிறீர்? என்று உணவு தந்தவர் வினவ நான் இறைவனைத் தேடி போய் கொண்டிருக்கிறேன் என்று பதில் கூறினார்.

இறைவனின் முகவரி என்னிடம் இருக்கிறது நீங்கள் அலையவேண்டாம் என்றார். உண்டவனுக்கோ ஆச்சரியம்…எங்கு இருக்கிறான் சொல்லுங்கள்?, என்று ஆர்வத்துடன் கேட்க அவரை அமைதிப்படுத்தி அமரவைத்தார்.

ஐயா! ஒன்றை அறியவேண்டுமானால் அதைப்பற்றி தெரிய வேண்டும். தெரிவது எப்படி? தெரிந்தவரிடம் கேட்க வேண்டும். இறைவனை அறியவேண்டுமானால் இறைவனின் படைப்பை அறியவேண்டும். நீயே இறைவனின் படைப்புதானே உன்னை நீ அறிய முற்படு நீ தேடும் இறைவனை நீ காணலாம் என்றார். இந்த அறிவுதான் குருவாக நிற்கிறது.
கையிலே வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைகின்ற கதைதான்.
பொறியியல் கல்லூரியில் மருத்துவம் படிப்பது எப்படி.? எதையும் சரியானவர்களிடம் சார்ந்தால்தான் நம்மை சரிசெய்துக் கொள்ள முடியும்.

ஞானத்தேடல் உள்ள மனிதனிடம் குருத்தேடல் இருக்கும். அறிந்தவரிடமிருந்து தான் அறிவைப் பெறமுடியும். குரு என்பது அறிவு . இந்த உலகமே குருத்துவமாக தான் இருக்கிறது.

ஒன்றிலிருந்து புறப்பட்டதுதான் இந்த உலகம் இரண்டு என்பது பேதம். இரண்டு ஒன்றாகும் போது அங்கு ஏற்படுவது ஏகத்துவம் . ஆதமும் ஏவாளும் (ஹவ்வா)ஒன்றிணைந்தபோது மனிதம் உற்பத்தியானது. அந்த வழிமுறைதான் நேற்றும், இன்றும், நாளையும்.

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்கிறோம். குழந்தையிடம் எந்த பாரபட்சமுமில்லை. நாமும் குழந்தையாக இருந்துதானே வளர்ந்திருக்கிறோம் நம்மிடமும் தெய்வத்தன்மை இருக்கவேண்டுமே இருக்கிறதா? இருக்கிறது அது மறைந்திருக்கிறது. இருந்தது எப்படி மறைந்தது?

நாம் படித்த நூல்களை அடிக்கி வைத்து வருகிறோம் நிறைய புத்தகங்கள் நம்மிடம் சேர்ந்துவிட்டன என்னென்ன நூல்கள் இருக்கிறது என்பதே சில நாட்களில் மறந்தும் போய்விடுகிறது. ஒரு குறிப்பிட்ட நூலைத் தேடுவதற்கு அடுக்கிவைத்த நூலை ஒவ்வொன்றாக எடுத்து இடமாற்றுவோம். நாம் தேடும் நூல் அடியில் இருக்கிறது இதை கண்டுபிடித்து எடுப்பதற்கு அடுக்கப்பட்டிருந்த அத்தனை நூட்களையும் எடுக்கவேண்டி இருந்தது அல்லவா? அதுபோல்தான் நாம் குழந்தையாக இருந்தபோது தெய்வத் தன்மையில் இருந்தோம் நாம் வளரவளர புத்தகங்களை அடிக்கியது போல நம் மனதில் அடிக்கி வைக்கப்பட்ட அத்தனையும் கிளறவேண்டும், தேடவேண்டும் தேவையானதை வைத்துக் கொண்டு தேவையற்ற எண்ணங்களை சிந்தனைகளை களையவேண்டும் அப்படி களையப்படும்போது தேடப்படுவது கிடைக்கும்.

எப்படி தேடுவது என்பதை சொல்லிக் கொடுப்பவர்தான் குரு. நம் முகத்தை நமக்கு காட்டும் கண்ணாடி போல. பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்தான் முதல் குருவாக இருக்கிறாள். தாய்க் கல்விக்கு பின்தான் கல்விக்கூடங்கள் மற்ற அனைத்தும்.

எதையும் கற்றுக் கொடுக்கப்படாமல் ஒரு குழந்தை வளர்ந்தால் அது மிருகமாகிவிடும். மிருகத்திற்கு ஒன்றை கற்றுக் கொடுத்தால் அது மனிதனாக முடியாது. படைப்புகளில் மிக சிறந்த படைப்பு மனிதன் என்கிறான் இறைவன்.

மனிதனிடம் எல்லா குண அதிசியங்களும் இருக்கின்றன. அதனால்தான் அவனுக்கு அதிகமாக போதனை தேவைப்படுகிறது.

மனிதன் மனிதனாக வாழ்வதற்கு ஞானஅறிவுத் தேவை…அந்த அறிவு மனிதனிடம் இருக்கிறது அதை அடையாளப்படுத்தவே குருத்துவம் தேவைப்படுகிறது.

பொருள் வாங்கச் சென்றவர்கள் கடையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நிற்கக் கூடாது வாங்கப்போகும் பொருளில் குறியாக இருப்பது போல் குருவிடம் சென்றவர்கள் ஞானத்தை பெறுவதில் குறியாக இருக்கவேண்டும் குருவிடம் குறையை தேடிக் கொண்டிருந்தால் நிறைவு பெற முடியாது.

Sunday, March 18, 2012

“கின்னஸ் புத்தகத்திற்கு கிடைத்த கின்னஸ் ரிக்காட்”

அகிலத்தின் அருட்கொடை அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்கள் செய்த சாதனையைப் போல் யாரும் செய்தது இல்லை என்பது இந்த உலகத்தின் பல நாடுகளில் வாழும் பல அறிஞர்களின் கருத்தாகும்.
மனித குலத்திற்கு விடிவெள்ளியாக மனித நேயத்திற்கு மாணிக்கமாகத் திகழ்ந்த கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு புதையலாகவே இருக்கிறார்கள். அவர்களைப்பற்றி அறிந்துக் கொள்ளவதற்கு செய்யப்படும் ஆய்வுகள் அதிகமதிகம். அந்த ஆய்வுகளில் கிடைத்த முடிவுகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருந்தது இல்லை என்பதே உண்மை.
தினம் பல்லாயிரம் கோடி மக்களால் அதிகமாக உச்சரிக்கப்படும் ஒரே பெயர் “முஹம்மத்”(ஸல்) அவர்கள். அந்தளவு மக்களின் அன்பையும் மக்களின் ஆர்வத்தையும் பெற்றிருக்கிறார்கள்.
அவர்களின் பெயரில் செய்யப்படும் ஒவ்வொரு வெளியீடும் அந்த வெளியீட்டாளருக்கே அல்லாஹ் கண்ணியத்தையும் கௌரவத்தையும் தந்துக் கொண்டிருக்கிறான்.

அந்த வகையிலே ஐக்கிய அரபு அமீரகம் பதினோரு மில்லியன் திரஹம் சிலவில் (இந்திய ரூபாய் மதிப்பு பதிநான்கு கோடியே என்பத்தைந்து லட்சம்) நானூற்று இருபது பக்கங்களில் ஆயிரம் கிலோ கிராம் எடையில் ஐந்து மீட்டர் நீலம் நான்கு மீட்டர் அகலம் கொண்ட இந்த உலகின் மிகப்பெரிய நூல் ஒன்றை அதிகமான செலவில் தயாரித்துள்ளது.
அந்த நூல் அகிலத்தின் அருட்கொடை அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கையைப் பற்றி கூறும் நூலாக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த நூலை ஐக்கிய அரபு அமீரகத்தின் நிதியமைச்சர் ஷேக்ஹம்தான் பின் அல்மக்தூம் அவர்கள் திறந்து வைத்தார் இந்நிகழ்ச்சிக்கு உயர் அரசு அலுவலர்களும் மன்னர் குடும்பத்தினர்களும் மற்றும் பன்னாட்டு தொழிலதிபர்களும் கலந்துக் கொண்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் நிதியமைச்சர் ஷேக்ஹம்தான் பின் அல்மக்தூம் அவர்கள் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் முன்மாதிரியான வாழ்வைப் சமூகம் அறிந்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் ஐம்பதாயிரம் சாதாரன பிரதிகளை தனது சொந்த செலவில் வெளியிடுவதற்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்நூலை வெளியீட்டாளர்களின் கருத்தானது “இஸ்லாத்தின் இறுதி நபியாக முஹம்மத்(ஸல்) அவர்கள் காணப்படுவதுடன்,சர்வதேச மற்றும் மனிதாபிமான ரீதியில் மிகவும் செல்வாக்குவாக்குச் செலுத்தியவர்களாகவும் நபி(ஸல்) அவர்கள் விளங்குகின்றார். நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையை முன்னிலைப் படுத்துவதன் மூலம் இஸ்லாத்தையும்,முஸ்லிம்களையும் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இச்செயல்திட்டத்தின் நோக்கமாகும் என இப்புத்தகத்தின் வெளியீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கின்னஸ் புத்தகம் இந்த உலகத்தில் நடந்த எத்தனையோ விசயங்களை சாதனைகளாக பட்டியலிட்டிருக்கிறது. ஆனால் முதல் முறையாக கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை கின்னஸ் தனது புத்தகத்தில் இடம் பெறச்செய்து தனது புத்தகத்திற்கு கின்னஸ் ரிக்காட்டை தனக்கே ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்று கூறுவதே சாலச் சிறந்தது.

இந்நூலை வெளியீட்டு பெருமானார் (ஸல்) அவர்களின் மீது கொண்டிருக்கும் அன்பை வெளிப்படுத்தி இவ்வுலகிற்கு இஸ்லாமிய நபிநேச விழிப்புணர்வை ஏற்படுத்திய ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசு மற்றும் நூல் குழுவினர்களுக்கு எனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்.

Sunday, February 26, 2012

ஒரு பாட்டில் "அன்பு" ஆயிரம் ரூபாய்!

இன்று காலை பணிக்கு புறப்படுமுன் தொலைக்காட்சியில் மகளிர் அரங்கத்தில் ஒரு சிறுமி பேசிக்கொண்டிருந்தாள் வயது அநேகமாக பத்துக்குள்ளாக இருக்குமென நினைக்கிறேன் கல்வியே அறிவைத் தரும் என்ற தலைப்பில் ஆவேசமாக பேசினாள்.

பணிக்கு புறப்பட்ட நான் ஐந்து நிமிடம் அந்த சிறுமியின் பேச்சை கேட்டுவிட்டு புறப்பட்டேன். சிந்தனை அந்த சிறுமியின் பேச்சில் சுழன்றது.

கல்வி மட்டுமே மனித சமுதாயத்தை மேம்படுத்தும் கல்வி ஒன்றே மனிதனை உயர்வடையச் செய்யும் என்றெல்லாம் பலரும் பேசுகிறார்கள் அவர்களின் பேச்சு உண்மையானதுதான் ஆனால் கற்கும் கல்வி?

ஒரு மாணவனின் வாழ்க்கை முன்னேற்றம் என்பது அவன் படித்து முடித்து வேலைக்கு சென்று நன்கு சம்பாதித்து எல்லா வசதிகளுடனும் வாழும்போது அவனை உயர்ந்த நிலையில் இருக்கிறான் என்று சமுதாயம் சொல்கிறது.

கல்வியினால் சமுதாயம் முன்னேறுகிறது என்பது மச்சி வீடு மாடி வீடாகவும், மாடி வீடு பங்களாக்களாகவும் இப்படி வசதிகள் கல்வியினால் மாற்றம் காண்கிறதே தவிர, மனித நேயத்தில், மனிதர்களின் குண நலன்களில் இன்றைய கல்வி மாற்றத்தை அதிகம் தருகிறதா(?) என்பது கேள்வியாகும்.

இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் கிராமம் வரையில் இணையதளம் வளர்ந்து விட்டது என்னவோ உண்மைதான் ஆனால் கிராமத்தில் வாழ்ந்த பெற்றோர்கள் இன்று முதியோர் இல்லங்களில் வாழ்ந்து வருவதும், முதியோர் இல்லங்கள் வளர்ந்து வருவதும் கல்வியின் முன்னேற்றமா?

பொருளாதாரத்தை முன்வைத்து கல்விச் சாலைகளும், கற்பிக்கப்படும் ஆசிரியர்களும், கற்கும் மாணவர்களும், பெற்றோர்களும் செல்கிறார்கள் அவர்களின் சமுதாயம் எப்படிபட்டாதக இருக்கிறது என்றால் மனிதனுக்கு மனிதன் உதவி செய்வது என்பது மறந்து உதவி செய்வதற்கு ஆதாயம்தேடும் வியாபார சமுதாயமாக மாறி வருகிறது என்பதை கண்கூடாகக் காணமுடிகிறது.

அண்ணன் தம்பிக்கு மத்தியில் பாசத்தைவிட தங்களிடமுள்ள பணம்தான் யார் அண்ணன் யார் தம்பி என்பதையே இன்றை சூழல் நிர்ணயிக்கிறது.

இந்திய அரசியல்வாதிகள் எல்லாம் படிக்காதவர்களா? கல்வி கற்றவர்கள்தானே? இன்று பொறுப்பில் இருக்கக்கூடியவர்களின் சுரண்டல்கள் எத்தனை கோடிகள் என்பதை ஊடகத்துறை வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டிருக்கிறதே இவர்களிடம் பொருளாதார ஆசையை மட்டுமே வளர்த்திருப்பது எது?

இன்றைய காலத்தில் பெரிய தவறுகளை எல்லாம் கல்வி கற்கும் சில மாணவர்கள் சர்வ சாதரணமாக செய்கிறார்கள் அவர்களுக்கு கற்பிக்கும் அந்த ஆசிரியர்கள் எப்படிபட்டவர்களாக இருப்பார்கள்?

கல்விச் சாலைகளை மிக அழகாக வடிவமைத்து வருவதில் இன்று கவனமாக இருக்கும் இவர்கள் அதில் படிக்கும் மாணவர்களின் குண நலன்களை அழகுபடுத்த வேண்டிய பணி கல்விச் சாலைகளுக்கு இருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது.

அறிவைக் கற்கும் அனைத்துமே கல்விதான் ஆனால் இன்றைய சூழலில் பெரும்பாலோர் அறிவு பெறுவதற்காக கல்வி கற்கவில்லை பொருளீட்டுவதற்காக மட்டுமே கல்வி கற்கிறார்கள். இந்த பொருள் கல்வியானால் இந்த சமுதாயத்தில் வசதிகள் பெருகலாம் ஆனால் ஒரு இயந்திரதனமான வாழ்க்கைமுறை வளர்ந்து மனிதம் ஏழையாகவே இருக்கும்.

பொருளாதாரத்தை வைத்து எதையும் செய்யமுடியும் என்ற எண்ணம் வளர்ந்து வரும் சமுதாயத்தில் அன்பு என்பது மினரல் வாட்டரைபோல பாட்டல்களில் அடைத்து ஒரு பாட்டில் அன்பு ஆயிரம் ரூபாய் என சூப்பர் மார்கெட்டுகளில் விற்பனை செய்யக்கூடிய காலம் நம்மை நோக்கி வந்துக் கொண்டிருக்கிறது.

மனிதனை மனிதனாக வாழவைக்கக்கூடிய தன்னை அறியும் ஞானக்கல்வியை இணைத்து கல்லூரிகளில் அனைவரும் கற்பதற்கு வழிவகை செய்யவேண்டும். அன்பும் நேயமும்மிக்க இந்த கல்வியினால் மட்டுமே இந்த சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றங்களை நிகழ்த்த முடியும்.

“சீன தேசம் சென்றாயினும் சீரான கல்வியைத்தேடு” என்று கூறும் அண்ணல் நபிகள் ஏட்டுக் கல்வியை கற்காதவர்கள். இறைவன் கற்பித்துக் கொடுத்த கல்வியைகற்று இந்த உலகத்திற்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்.

ஒவ்வொரு மனிதனும் ஒரு கல்விச்சாலையாகவே இருக்கிறான் அவன் அதை அறிந்துக் கொண்டானேயானால் மனிதம் மலரும் அன்பு ஓங்கும்.தினம் அரைமணித் துளியேனும் நம்மை நாம் சிந்திக்க முற்பட்டால் நம்மிலே மாற்றங்கள் நிகழும் அந்த மாற்றம் இந்த சமுதாயத்தை மாற்றும்.!

Saturday, February 25, 2012

தந்தைக்கு ஒரு தாலாட்டு - 2

சிங்கை மருத்துவரிடம் இந்தியாவிற்கு என்தந்தையை அழைத்துச் செல்கிறேன் என்று அனுமதி கேட்டதும் அவர்களும் அனுமதி அளித்தனர்.

ஐம்பதாண்டு காலம் வாழ்ந்த சிங்கப்பூர் அந்த நாட்டின் குடிமகன் என் தந்தையை அந்த நாட்டைவிட்டு அழைத்துச் செல்லும்போது என்தந்தையின் மனம் பட்ட கஷ்டங்களை என்னால் காணமுடிந்தது.

உறவினர்கள் அனைவரும் விமான நிலையத்தில் திரண்டு நின்று தள்ளு வண்டியில் அமர்ந்திருந்த என்தந்தைக்கு வழியனுப்பு விழாவைப் போல வாழ்த்துச் சொல்லி அனுப்பிய அந்த கணம் இனி நான் சிங்கப்பூர் வரவே மாட்டேனோ(?) என்ற கேள்விப் பார்வையோடு அனைவரையும் பார்த்து கண்ணீரோடு விடைபெற்ற அந்த தருணங்கள் வரையில் இவர் மறுஉலக வாழ்க்கைக்கு செல்ல விடைபெறுகிறார் என்ற இரகசியம் எங்கள் யாருக்குமே தெரியாது.

சென்னை விமான நிலையத்தில் எங்கள் குடும்பம் தந்தையின் வருகைக்காக காத்திருக்க தள்ளு வண்டியில் தள்ளிக் கொண்டு வந்ததைப் பார்த்த என்தாயார் மற்றும் சகோதர சகோதரிகள் கதறி அழுதனர்.

சர்கரை வியாதிக்கு நல்ல முறையில் சிகிச்சை செய்யக்கூடியவர் நாகப்பட்டினம் அன்சாரி டாக்டர் என்பதை கேள்விப்பட்டிருந்ததால் சென்னையிலிருந்து நாகைக்கு விரைந்தோம்… டாக்டர் பார்த்துவிட்டு புண்ணை குணமாக்கி விடலாம் என்று ஆறுதலான வார்த்தைகளை உதிர்த்தார். இரண்டு தினங்களில் தைரியத்துடன் நான் பணிக்கு துபாய் திரும்பிவிட்டேன்.

சரியாக மூன்று மாதத்தில் பெருவிரலிலும் கால் பாதத்திலும் ஏற்பட்ட புண்ணை குணமாக்கி என் தந்தையை நடமாடவிட்ட பெருமை டாக்டர் அன்சாரியை சாரும். இரண்டாண்டுகள் இறைவணக்கத்திலேயே அதிகமாக பொழுதை கழித்தார் அவ்வபோது சர்க்கரை வியாதியின் தாக்குதலும் இருந்துக் கொண்டு இருந்தது.

2004 லில் விடுமுறையில் தாயகம் வந்தபோது சில தினங்களில் என் தந்தை உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். மாதம் ஒருமுறை உடல் பரிசோதனை செய்வதற்கு செல்லும் தஞ்சாவூர் ரோகினி மருத்துவமனைக்கு என்தந்தையை அழைத்துச்செல்ல தயாரானோம். அந்த தருணத்தில் என் தந்தையின் உடன்பிறந்த சகோதரி வந்திருந்தார் என் தந்தைக்கு சட்டை அணிவித்து பொத்தான் மாட்டிவிட்டு அண்ணே நல்லபடி திரும்ப வருவேண்ணே என்ற வார்த்தையை கூறியபோது அந்த வார்த்தை என்மனத்தில் ஏதோ ஒரு நெருடலை கொடுத்தது.

ரோகினி மருத்துவமனையில் எங்கள் உறவினர் ஒருவரை சேர்த்து இருந்தார்கள். அவர்களும் என் தந்தையைக் கண்டு நலம் விசாரித்துவிட்டு சிங்கப்பூரின் பழைய கதைகளை பேசி கலகலப்பாக இருந்தார்.
மூன்று தினங்களாக வாடிய முகத்துடன் இருந்த என் தந்தை அவரின் பழைய நிகழ்வுகள் நினைவுகள் அவர் மனதை உற்சாகப்படுத்தியது.

இரவு அங்கு தங்கியிருக்கும் சூழல் ஏற்படவே என்னை வீட்டு போகும்படி என் தந்தைக் கூற, வேண்டாம் நான் இங்கு இருக்கிறேன் தம்பி வீட்டுக்கு போகட்டும் என்று கூறி தம்பியை அனுப்பி விட்டேன்.

பின்னிரவில் மூச்சுத்தினரல் ஏற்பட்டது உறங்கிக் கொண்டிருந்த என்னை என்தாயார் எழுப்ப நான் அவசரமாக மருத்துவரை கூப்பிட்டேன் வந்து பார்த்துவிட்டு ஆக்ஸிஜன் கவரை உபயோகிக்க கொடுத்துவிட்டு சென்றார்.

சற்று நேரத்தில் மூச்சுத்திணறல் சரியானது கட்டிலில் அமர்ந்திருந்த என் தந்தை கீழே அமரவேண்டும் எனக்கேட்க கீழே அமர்த்தினேன். மீண்டும் கட்டிலில் அமர வேண்டும் எனச் சொல்ல தந்தையைத் தூக்கி கட்டிலில் அமர வைப்பதற்கு சிரமப்பட்டேன்.

காலை ஆறு மணிக்கு என் தந்தையை பரிசோதிக்க டாக்டர் அறைக்குள் வரவே நான் பக்கத்து அறையில் உள்ள உறவினருக்காக மருத்துவமனையின் கீழ்தளத்தில் உள்ள உணவகத்தில் பால் வாங்க சென்று சில வினாடிகளில் என் மனைவி பதற்றத்துடன் என்னை அழைக்க ஓடிப்போய் என் தந்தையை கண்டபோது கட்டிலில் உறக்க நிலையில் கிடக்க டாக்டர் என் தந்தையின் நெஞ்சை அழுத்தி அழுத்தி பம்ப் செய்துக் கொண்டிருந்தார்.

என்ன நடக்கிறது என்று என்னால் யூகிப்பதற்குள் என்தாயாரும் என் மனைவியும் அழுதுக் கொண்டிருக்க டாக்டரை நகரச் சொல்லி என் தந்தையின் நெஞ்சத்தை என் கைகளால் இறைவனின் பெயரைச் சொல்லி அழுத்தினேன். என் தந்தையின் கண்கள் மூடியேயிருந்தன புரிந்துவிட்டது பால் வாங்க சென்ற சில வினாடிகளில் அவசர அவசரமாக முன்கர் நக்கீர் வந்துபோய்விட்டார்..
“தாருல் பனாவைவிட்டு தாருல்பகாவை என் தந்தை அடைந்துவிட்டார்கள்.

வாழ்க்கையின் பெரும்பகுதி குடும்பத்திற்காகவே வாழ்ந்தவர்களில் என் தந்தையும் ஒருவர். தன் சுகத்தைவிட குழந்தைகளின் நலனையே தனது வாழ்க்கையாக்கி வாழ்ந்தவர்.
என் தந்தையின் தியாகங்களை முழுமையாக இங்கு விவரிக்கவில்லை என்றாலும் நான் உங்களோடு பகிர்ந்துக் கொண்டதில் விளங்கி இருப்பீர்கள் இவ்வளவு தூரம் என் சொந்தக் கதையை வாசித்த உங்களுக்கு என்றும் நன்றியுடன்…

Friday, February 24, 2012

தந்தைக்கு ஒரு தாலாட்டு

ஒரு நாட்டின் தலைவர் மரணமடைந்தால் நாடே துக்கத்தை அனுஷ்டிக்கும். ஒரு வீட்டின் தலைவன் இறந்தால் அந்த குடும்பமும் அதன் உறவுகளும் துக்கத்தை அனுபவிக்கும். நம் வாழ்க்ககையில் நம் குடும்பத்தில் நம் உறவினர்களில் யாரோ ஒருவரின் மரணத்தை நாம் சந்தித்திருப்போம் அதன் தாக்கம் நம் மனதை பாதித்திருக்கும் அப்படித்தான் என் வாழ்க்கையிலும் என் தந்தையைப் பற்றிய இடுக்கைதான் இது.

2004 ஜூன் எனது விடுமுறை மாதம் ஆண்டு தோறும் இந்த மாதத்தில் தான் துபாயிலிருந்து தாயகம் செல்வேன். முந்தைய ஆண்டில் எனது மனைவி குழந்தைகளை தாயகத்திலே விட்டுவந்திருந்தேன். வெளிநாட்டு வாழ்க்கையில் விடுமுறையில் தாயகம் செல்வதென்பது இமயமலை உச்சியில் ஏறிய சந்தோசத்தைப் போல மனம் மகிழ்ச்சியின் பிரவேசமாகவே இருக்கும்.

எத்தனை அறிவியல் வளர்ச்சி வளர்ந்திருந்தாலும் நம் உறவுகளை நேரில் கண்டு உண்டு
பேசி சிரிப்பதைப் போல் உள்ள மகிழ்வு எதிலும் இல்லை.

மாலை ஐந்து மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து இல்லம் வந்து சேர்ந்த என்னை என் தந்தை கட்டி தழுவி வரவேற்றார். இதுவே கடைசி தழுவல் என்பது எங்கள் யாருக்கும் தெரியாத இறை இரகசியமாக இருந்தது.

ஐம்பது ஆண்டுகளுக்கும் அதிகமாக சிங்கையிலே தனது வாழ்க்கையை கழித்தவர் என் தந்தை. சக்கரைநோயின் தாக்குதலினால் காலில் புண் ஏற்பட்டு அதையும் பொருட்படுத்தாமல் அலட்சியமாகவே சிங்கையில் வணிகம் புரிந்த என் தந்தையை வழுக்கட்டாயமாக மருத்துவ மனையில் சீனர்கள் சேர்த்து விட்ட போது மருத்துவர்கள் ஒரு காளை வெட்டி எடுக்கவேண்டும் என்று கூறிய போதுதான் நோயின் தாக்குதலை உணர்ந்திருந்தார்.
அதுவரையில் அவர் உள்ளத்திலும் எண்ணத்திலும் நோயின் பாதிப்பு இல்லை. குடும்பத்தின் மீது அவர் வைத்திருந்த அதீத பாசம் மட்டுமே இருந்தது.


சிங்கை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செய்தியறிந்து சிங்கைக்கு விரைந்தேன் தன்னந்தனியே மருத்துவமனையில் படுத்துக் கிடந்த என் தந்தையை இரண்டாவது நாளில் அதிகாலை ஐந்து மணிக்கு உறக்கத்திலிருந்து அவர் கண்விழித்த போது அவரருகில் நான் நின்றதைக் கண்டதும் அவர் முகத்திலும் கண்களிலும் பெருக் கெடுத்த கண்ணீர். இந்த மரம் காய்த்து ஒய்ந்திடுச்சிப்பா இனி காய்க்காது என்று சொல்வதைப் போல்…

உங்க விதையில் முளைத்த மரங்கள் உங்களை சுமக்கும் என்ற ஆறுதலோடு என் தந்தையின் கரங்களைப் பற்றி பிடித்த நான் …

வந்துட்டேன் கவலை வேண்டாம் என்ற போது
துபாயிலேந்து எப்போ வந்தே ?
வந்து ஒரு மணிநேரமாச்சு என்றதும்
என்னை எழுப்பி இருக்கலாமே என்றார்.

ஐம்பதாண்டு சிங்கை வாழ்க்கையில் என் தந்தைக்கு அதிகமான தொந்தரவுகளை கொடுத்துருக்கிறேன். உறக்கத்தில் கூட இனி தொந்தரவு செய்யக் கூடாது என்ற உணர்வில் இருந்தேன் என்பதை என்னால் இங்கு எழுதத்தான் முடிந்தது.

ஆண்பிள்ளைகள் பெற்றால் நிறைய சம்பாதித்து போடுவார்கள் என்ற கனவு பல பெற்றோர்களிடம் இருக்கிறது. சம்பாதித்து போடுகிறார்களோ இல்லையோ பெற்றோர்களை பேணுகின்றார்களா ? என்பதே இன்றைய காலக்கட்டத்தில் கேள்விக் கணைகளாக இருக்கிறது.

ஐந்து ஆண்மக்களையும் இரு பெண் மக்களையும் பெற்றிருந்தாலும் எங்களை யெல்லாம் பெண்பிள்ளைகளை வைத்து காப்பதுபோல் தான் காத்து நின்றார்.
சுயமாக பறப்பதற்கு இறக்கைகள் முளைத்தாலும் காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சுதானே.

சிங்கையில் எந்த உறவினர்களின் வீட்டுக்கும் அடிக்கடி செல்லாதவர். நடைபாதை கடையிலேயே தனது இளமைக்கு விடைக் கொடுத்தவர். அவருக்கு தெரிந்ததெல்லாம் சிங்கையின் விமான நிலையமும் தான் தங்கிருக்கும் வாடகை வீடு மட்டுமே. தனக்காக வாழ்ந்ததை விட தனது குடும்பத்திற்காக வாழ்ந்த வாழ்க்கை அதிகம்.

பொருள் சம்பாதிக்கலாம் சிலவும் செய்யலாம் மீண்டும் சம்பாதிக்கலாம் ஆனால் இளமையை சிலவு செய்யத்தான் முடியுமே தவிர சம்பாதிக்க முடியுமா?

ஓரு ரூபாயாக இருந்தாலும் அதை ஒரு லட்சமாக எண்ணி சேமிக்கும் குணங்கொண்டவர் அதனால் தான் அந்த ஒரு ரூபாய் பல லட்சங்களாய் கோடிகளாய் என் தந்தையின் பெயரை இன்றும் உச்சரித்துக்கொண்டிருக்கிறது.
என் தந்தை J.கமாலுதீன்

இந்த கடையை நிறுவுவதற்கு அவர் பட்டக் கஸ்டங்கள் எவ்வளவு இதோ இந்த கடையை நான் கலைந்துக் கொண்டிருக்கின்றேனே இந்த கடை ஈட்டித்தந்த வருமானத்தில் வளர்ந்தவன் தானே நான் எங்கள் குடும்பம். ஐம்பதாண்டு கால கூட்டை ஐம்பது நிமிடங்களில் கலைத்துவிட்டேனே… இவைகளை பார்க்கமல் எனது தந்தை மருத்துவ மனையில் இருந்தார். அவரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு இவைகளை என்னால் செய்திருக்க முடியுமா? அவரால் அதனைக் காணத்தான் முடியுமா?நான் கலைத்தது கடையல்ல என் தந்தையின் கனவு.

பதிவு பெரியதாக இருப்பதினால் இதன் தொடர்ச்சியை நாளை வாசிக்கலாமே...

தொடர்வோம்...